
எப்போதாவது முன்பின் தெரியாத ஊரில் முகவரியில்லாமல் யாரையாவது தேடியது போன்று நம்முடைய வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் ஏதேனுமொரு செய்திக்காக நாம் அதனை தேடித்தேடியே தொலைந்து போயிருப்போம். அது போன்று இணையத்தில் தேடிடும் சந்தர்ப்பங்களில் நமக்குக் கைகொடுப்பது தான் குறிச்சொற்கள். ஆகும். அதாவது சிவப்பாக ஒட்டடைகுச்சிபோல உயரமா, டிவிஎஸ்50யில் எப்போதும் பயனிப்பவர் என்றவாறு தேடும் நபரைபற்றிய ஒருசில அடையாளத்தை நாம் சொல்லி தேடுவதற்கு முயற்சிப்போம். இவற்றுள் “சிவப்பாக ஒட்டடைகுச்சி, உயரமா, டிவிஎஸ்50″ ஆகியவை தான் குறிச்சொற்கள்.
இணையம் என்பது கிட்டத்தட்ட மேல்திருப்பதி போன்றதாகும். அங்கு நாம் தேடும் மொட்டைத்தலையைக் கண்டுபிடிப்பது என்பது மிகமிக கடினமான செயலாகும் அவ்வாறான கடினமான பணியை செய்வதற்காக நமக்கு தோள் கொடுக்கும் தோழன் தான் இந்த தேடுபொறிகள் (search engines)ஆகும். இவை தத்தமக்கென தனித்தனி அட்டவணையைப் பராமரித்து வருகின்றன. அந்த அட்டவணையில் இணையத்தளங்களின் யூஆர்எல்முகவரிகளும், அவற்றின் குறிச்சொற்களும் பொதுத்தகவல்களும் சேமிக்கப்பட்டிருக்கும். நாம் தேடுபொறிகளில் குறிச்சொற்களை உள்ளீடுசெய்து தேடும் போது இந்தசொற்கள் எந்தெந்த இணையத்தளத்தின் குறிச்சொற்களுடன் ஒத்துப்போகிறதோ அவற்றை மட்டும் நம்முடைய தேடலின் முடிவுகளாகக் கணினியின் திரையில் காண்கிறோம்.
ஒரு இணையத்தளத்தின் சராசரி வருகையாளர் எண்ணிக்கை, பக்கங்களின் கட்டமைப்பு, குறிச்சொற்களுக்கும் பக்கங்களின் தகவல்களுக்கும் உள்ள தொடர்பு, மற்ற தளங்களில் இருந்து தொடர்புக்கு கொடுக்கப்படும் யூஆர்எல்முகவரிகள் ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு இணையத்தளத்தையும் தேடுபொறிகள் மதிப்பீடு (site rank) செய்து வரிசைப்படுத்துகின்றன. அதனடிப்படையிலேயே தேடல் முடிவுகள் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் நமக்கு திரையில் அளி்க்கப்படுகின்றன.
ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் வருகையாளர்கள் மிகமுக்கியமாகும். இன்றைய இணையப்பயன்பாட்டில் பெரும்பாலான வருகைகள் தேடுபொறிகள் மூலமாகவே கிடைப்பதனால் இணையத்தில் குறிச்சொற்கள் மிகமுக்கிய இடத்தைப் பெறுகின்றன.
பொதுவாக தேடுபொறிகளின் பார்வையில் ஒரு இணையத்தளம் யூஆர்எல்முகவரிகளும், குறிச்சொற்களும் சேர்ந்த ஒரு கலவையாக மட்டுமே தோன்றும். அதனால் தான் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் குறிச்சொற்கள் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக பொருட்களைச் சந்தைப்படுத்தும் இணையத்தளங்களுக்கு இவைதான் உயிர்நாடியாகும். இணையத்தளத்திற்கு சரியான குறிச்சொற்களைத் தேர்ந்தெடுத்தல், இணையத்தளபக்கங்களின் தொடர் கட்டமைப்பு (sitemap) தேடுபொறிகளின் முடிவுகளில் முதல் இடத்தை அல்லது குறைந்த பட்சம் முதல் பக்கத்திலாவது இடம்பிடிப்பது போன்ற வேலையைச் செய்வதற்கென்றே search engine optimization என்ற ஒரு துறை இருக்கின்றது
இங்கு இணையத்தளங்கள் என்பது வலைபூ(blog) பதிவுகளும் அடங்கும். இன்றைய காலகட்டத்தில் தேடுபொறி என்றால் முதலிடத்தில் கூகுள் வந்து நிற்பது தவிர்க்கமுடியாத ஒன்று. இந்த கூகுள் இணையத்தளம் ஒரு நாள் முடக்கப்பட்டால் இணைய உலகம் முழுவதுமே செயலிழந்து போய்விடும் அளவுக்கு இணையத்தில் இதன் வீச்சு காணப்படுகின்றது.
அதனால் கூகுள் தேடுபொறியில் நம்முடைய வலைபூவானது முதலிடம் பிடிப்பதற்கு முதலில் இதனுடைய ப்ளாக்கர் இணையத்தளத்தில் நம்முடைய வலைபூ பதிவைத் துவங்குக.இதன் மூலம் நம்முடைய பதிவின் பெயர் தேடுபொறியில் குறிச்சொல்லாக சேர்க்கப்பட்டு விடுகிறது. மேலும் நாம் இணைத்து கொள்ளும் திரட்டிகளின் வாயிலாகவும் நம்முடைய பதிவின் தலைப்புகளையும் லேபிள்களையும் குறிச்சொற்களாக சேர்க்கப்படுகின்றன. இருந்தாலும் தேடுபொறிகள் மூலம் பெறப்படும் வருகையாளர்களுக்கு நம்முடைய பதிவுகளுடன் திரட்டிகளின் மூலமாகவோ அல்லது ப்ளாக்கர் தளத்தின் மூலமாகவோ சேர்க்கப்படும் குறிச்சொற்கள் நாம் எழுதும் தகவல்களை எந்த அளவுக்கு சம்பந்தப்படுத்திக் காட்டும் என்பது நிச்சயமில்லை. தரமான குறிச்சொற்களின் அடிப்படையில் தேடுபொறிகளின் மூலம் நம்முடைய பதிவுகளைத் தேவையான பயனாளர்களுக்கு எளிதாக கொண்டு சேர்க்கலாம்.
தேடுபொறிகள் ஒரு வலைபூ பதிவைத் தரப்படுத்துவதற்காக ஆராயும் போது எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை நாம் புரிந்து கொண்டாலே மற்ற வேலைகள் நமக்கு மிக மிக எளிதாகிவிடும். நம்முடைய வலைபூவின் தலைப்பு அருசருகு அல்லது ஓப்பன் ஆஃபிஸ் என்றவாறும், ஓவ்வொரு இடுகைக்கும் அளிக்கும் தலைப்பு 2012ல் உலகம் அழியுமா அல்லது கணக்கு புதிர் என்றவாறும், இடுகைகளில் வழங்கும் படங்கள், எத்தனை பேர் நம்முடைய பதிவுக்கு வருகை தருகிறார்கள், எத்தனை பேர் நம்முடைய பதிவினை தொடர்கிறார்கள், நாம் எத்தனை பேரைத் தொடர்கிறோம், பெறும் பின்னூட்டங்கள், எவ்வளவு சீரான கால இடைவெளியில் புதுப்புது பதிவுகள் நம்முடைய வலைபூவில் வெளியிடப்படுகின்றனவா அதன் தனித்தன்மை, நம்முடைய பதிவுக்கு மற்ற தளங்களில் இருந்து யூஆர்எல் முகவரி மூலம் உள்ள தொடர்பு, உங்கள் பதிவின் meta tags மூலம் நாம் வழங்கியிருக்கும் குறிச்சொற்கள் ஆகிய அனைத்தும் தேடுபொறிகள் நம்முடைய பதிவைத் தரப்படுத்துவதற்கு மிகமுக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய வலைபூவின் தலைப்பைப் (blog title) பெரும்பாலும் தாங்கள் எழுதும் செய்திகளுடன் தொடர்புப்படுத்தி வைப்பதில்லை, உதாரணம் அருகுசருகு பொதுவாக தத்தமது சொந்த எண்ணங்கள், கிறுக்கல், பிதற்றல், உளறல், போன்ற தலைப்புகளை இவற்றில் காணப்பெறலாம். ஆகவே முதலில் செய்ய வேண்டியது நம்முடைய வலைபூவின் தலைப்பானது நாம் எழுதும் செய்திகளோடு தொடர்பு உள்ளதாக வைத்துக் கொள்வதே அதே போன்று ஓவ்வொரு இடுகைக்கும் நாம் வைக்கும் தலைப்பும் (post title) மிக முக்கியமாகும் சிறுகதை, கவிதை எழுதும் பதிவர்கள் தம்முடைய தலைப்பின் இறுதியில் சிறுகதை அல்லது கவிதை என்பன போன்ற சொற்களைச் சேர்த்தால் தேடுபொறிகளில் சிறுகதை, கவிதை போன்ற குறிச்சொற்களைத் கொண்டு தேடும் அன்பர்களுக்கு நம்முடைய வலைபூவின் தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும் பாக்கியம் பெறுவார்கள்.
பின்னூட்டங்கள், பதிவினைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாம் தொடரும் எண்ணிக்கை, மற்ற பதிவுகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ நம்முடைய பதிவிற்கு தொடர்பு யூஆர்எல் முகவரிகள் ஆகியவை நம்முடைய பதிவின் நம்பகத்தன்மையினை அதிகரிக்கும் கூடுதலான காரணிகள் ஆகும்.
இங்கு பின்னூட்டங்கள் என்பது தனிப்பட்டமுறையில் எத்தனை பதிவர்கள் பின்னூட்டங்கள் வழங்குகிறார்கள் என்பதாகும்.. ஒரே நபரோ அல்லது குழுவோ செய்யும் பின்னூட்டக் கும்மிக்கு எந்த பயனும் இல்லை. மேலும் ஒருவலைபூவானது கிட்டத்தட்ட ஆர்குட் போல ஒரு சமூக வலைதளம் ஆகும் என்பதையும் நினைவில் கொள்க. நம்முடைய பதிவு எத்தனை மற்ற பதிவுகளைத் தொடர்கின்றது எத்தனைப் பதிவுகள் நம்முடைய பதிவைத் தொடர்கின்றன, அவ்வாறு தொடர்புகளை இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளின் உள்ளடக்கம் (content) எவ்வாறு நம்முடைய பதிவின் உள்ளடக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது போன்ற இன்னபிற செய்திகளின் அடிப்படையிலும் நம்முடைய பதிவின் தரம் எடை போடப்படுகின்றன. இதில்தான் தேடுபொறிகளின் பார்வையில் சாதரண இணையத்தளங்களிலிருந்து வலைபூக்களின் பதிவுகள் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு நாம் கவிதை எழுதும் பதிவு வைத்திருந்தால், மற்ற கவிதைகள் எழுதும் பதிவுகளோடு தொடர்பு படுத்தப் பட்டிருப்பின் சிறப்பு ஆகும். அவ்வாறு தொடர்புப் படுத்தப்பட்டிருக்கும் பதிவுகள் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் நம்முடைய பதிவினை விட சிறப்பானதாக இருந்தால் மிகமிகச்சிறப்பு. ஆகும்
அடுத்து ஒரு பதிவராக நம்முடைய செயல்பாடு எப்படி இருக்கிறது (active blogger) . எத்தனை நாளைக்கு ஒரு முறை நம்முடைய பதிவில் புதுப்புது இடுகைகள் பதிவேற்றப்படுகின்றன, எத்தனை பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பன போன்ற செய்திகளும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. தரப்படுத்துதலில் மிகவும் சக்திவாய்ந்த காரணியாகக் கருதப்படுவது மற்ற தளங்கள் அல்லது பதிவுகளில் இருந்து நம்முடைய பதிவிற்கு கொடுக்கப்படும் சுட்டிகள்தான். சில தொழில்முறைப் பதிவர்கள் தேடுபொறியின் தரப்பட்டியலில் முன்னேறும் பொருட்டு நட்பு முறையில் அவருக்கு இவரும், இவருக்கு அவரும் சுட்டிகள் கொடுத்துக் கொள்வது வழக்கம். ஏதாவது ஒரு விஷயத்திற்கு மதிப்பதிகம் என்று அறிந்தால் அன்றே அதைச் சந்தைப்படுத்தி காசு பார்ப்பது தான் கண்ணுக்கும், பணப்பைக்கும் அழகென்பதால், வருடச் சந்தா செலுத்தினால் உங்களின் சுட்டியை தங்கள் தளத்தில் வெளியிடும் தளங்கள் ஏராளமாக உள்ளன.
பொதுவாக தேடுபொறிகள் நம்முடைய பதிவினை ஆய்வு செய்யும் போது படங்களை அவற்றின் கோப்புப் பெயர் அவற்றுடன் இணைக்கப்பட்ட குறிச்சொற்களையுமே எடுத்துக் கொள்ளும். எனவே படங்களை இணைக்கும் பொழுது கோப்பின் பெயர் படம் விளக்கும் செய்தியை ஒத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். படங்களை இணைத்த பிறகு EDIT HTML பகுதிக்கு சென்று கீழ்காணும் முறையில் அப்படத்திற்கானக் குறிச்சொற்களை வழங்கலாம்.
< src=”test.gif” width=”25″ height=”25″ alt=”Place your keyword list here”>
அதே போன்று meta tag மூலம் நம்முடைய பதிவிற்கு பொதுவாக என்னென்ன குறிச்சொற்கள் கொடுக்க விரும்புகிறோமோ அதனை வழங்கலாம். meta tag மூலம் கொடுக்கப்படும் குறிச்சொற்களுக்கு முக்கியத்துவம் கொஞ்சம் குறைவு என்றாலும், அவற்றையும் தேடுபொறிகள் அலசுவதால் கீழ்காணும் முறையில் dashboard -> layout -> edit html சென்று < /head >முன்பாக குறிச்சொற்களை வழங்குக.
< equiv=”Content-Type” content=”text/html; charset=utf-8″>
< name=”DESCRIPTION” content=”meta description goes here which appears in search results “>
< name=”KEYWORDS” content=”your keywords,go here,separated by a comma,but not a space”>

இவ்வளவும் செய்தாலும் நம்முடைய வலைபூவின் பதிவு தேடுபொறிகளின் தரப்பட்டியலில் முதன்மை பக்கத்தில் எப்போது வரும் என்பது தேவரகசியம் ஆகும். சிலவாரங்கள், மாதங்கள், சமயத்தில் வருடங்கள் கூட ஆகலாம். சிறிதுசிறிதாக நம்முடைய வலைபூவிற்கு மெருகேற்றும் வேலையைச் செய்து கொண்டே பொறுமையாக காத்திருக்க வேண்டியது தான் நம்முடைய பணியாகும் . தேடுபொறிகள் வலைபூக்களின் பதிவுகளை விட இணையத்தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சரியாக மேம்படுத்துதலாலும் நம்முடைய தகவல்களின் தனித்துவத்தாலும் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் இணையதளங்களைத் தாண்டி நம்முடைய பதிவுகள் முன்னெறுவது மிக எளிதான செயலாகும்
ஓவ்வொரு தேடுபொறிக்கும் crawler என்ற நிரல் ஒன்று இருக்கும். இந்த நிரல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் அட்டவணையில் இருக்கும் தளங்களுக்கு வருகை தந்து தரப்படுத்தத் தேவையான தகவல்களைத் திரட்டிச் செல்லும்.
இணையத்தில் இருக்கும் ஒவ்வொரு தளமும், பதிவுகளும் கிட்டத்தட்ட கண்ணாடி அறை போன்றதாகும். வருகையாளர்கள் நம்முடைய படைப்புகளைப் பார்க்க முடியுமே தவிர உள்ளிருக்கும் நம்மை அன்று. வருகையாளர்கள் எவற்றைக் கவனிக்கிறார்கள், எந்தப் படைப்புகள் பெரும்பாலோனோரை ஈர்க்கிறது, எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு நம்முடைய தளமோ/பதிவோ குறித்து எப்படி தெரிந்து கொண்டார்கள் ஆகியவிவரங்களை நம்முடைய இருப்பைக் காட்டிக் கொள்ளாமலேயே கண்டுகொள்ளலாம். இதன் மூலம் நம்முடைய பதிவினைப் பார்ப்பவர்களின் பார்வையினை அலசிக் நாமே நம்முடைய பதிவினை சுயப்பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
இப்படி நம்முடைய வலைபூ பதிவைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்றான, நம்முடைய பதிவிற்கு தங்களுடைய தளங்கள்/பதிவுகளில் யூஆர்எல்முகவரி கொடுத்துள்ள நல்ல உள்ளங்கள் யார், யார் என்பதை அறிந்துகொள்ள கூகுளுக்குச் சென்று “link: yourblogname. blogspot.com” என்று மனு போட்டால் மறுகணம் தேவையான தகவல்களைப் பெறலாம்.
நம்முடைய தளத்தின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது, நம்முடைய வலைபூவினுடைய பதிவிற்கு வந்து போன விவரம் ஆகியவைக் குறித்து அறிந்து கொள்ள google webmasters , வருகையாளர்கள் குறித்தான அலசலுக்கு google analytics .ஆகிய இரண்டு சேவைகளும் கூகுளின் crawler நிரல் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன

இந்த Google webmaster சேவையினைப் பயன்படுத்த உங்கள் வலைபூவின் மேலிருக்கும் dashboard => tools and resources => webmaster tools => enable webmaster tools => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் நம்முடைய பதிவை இணைத்துக் கொள்ளலாம். அல்லது http://www.google.com/webmasters/ என்ற யூஆர்எல்முகவரிக்குச் சென்று adding a site => verfiy through meta tags=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலமும் நம்முடைய பதிவினை இணைத்துக் கொள்ளலாம். பின்னர் அதிலுள்ள வசதிகள் ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து பார்த்து செயல்படுத்தினால் ஓரளவு அனைத்து விவரங்களும் நமக்கு கைவரப்பெறலாம்.
google analytics சேவையினைப் பயன்படுத்த http://www.google.com/analytics/ என்ற யூஆர்எல்முகவரிக்குச் சென்று add new website profile என்பதைத் தெரிவுசெய்து நம்முடைய வலைபூவின் யூஆர்எல்முகவரியை உள்ளீடு செய்க. உடன் நம்முடைய பதிவுக்கான நிரல் ஒன்று வழங்கப்படும். இந்தநிரலுக்கு அருகில் ‘one domain with multiple subdomains’ என்பதைத் தேர்வு செய்தபின் நிரலை பிரதியெடுத்து நம்முடைய வலைபூவின் மேலிருக்கும் dashboard => layout => edit html=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் < / body > என்ற இடத்திற்கு முன்பாக ஒட்டி சேமித்தபின் 24 மணி நேரம் கழித்து google analytics சென்று பார்த்தால் நம்முடைய புருவம் உயரும் வண்ணம் விவரங்களை காணலாம்.
மேற்சொன்ன இரண்டு சேவைகளுமே இலவசம்ஆகும் இதனை நம்முடைய ஜிமெயில் கணக்கின் மூலமாகவே பதிவு செய்து கொள்ள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.ஆகும்
இறுதியாகgoogle sandbox effect குறித்து தெரிந்து கொள்வதுநல்லது தேடுபொறிகள் தரப்படுத்தப் பயன்படுத்தும் நிரல்களே அவர்களின் தொழில்ரகசியம் ஆகும். அவற்றைப் பற்றி எப்போதும் வெளிப்படையானத் தகவல்கள் காணக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் பல தளங்களை நடத்தி வருகிறார். மேலும் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். புதிய தளத்தினை தேடுபொறிகளின் தரப்பட்டியலில் குபீரென்று மேலே கொண்டு செல்ல புதிய தளத்தின் யூஆர்எல்முகவரிகளைத் தன் வசமுள்ள தளங்கள் அனைத்திலும் இடுகிறார். இவ்வாறு திரைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே மாபெரும் வெற்றி என சுயவிளம்பரங்கள் வருவதைப் போல குறுகிய கால இடைவெளியில் தரப்பட்டியலில் அசாதரணமாக முன்னேறும் தளங்களை கூகுள் வேண்டுமென்றே 3 முதல் 6 மாதங்கள் வரை அடக்கி வைக்கின்றது என்ற கருத்து பொதுவாக பரவலாக நிலவுகின்றது, இதைத்தான் sandbox effect எனகூறுகின்றார்கள். இதில் இருந்து தப்பிக்க பொறுமையாக 6 மாதம் பார்க், பீச் என்று ஊர்சுற்றி விட்டு வந்தால் தவிர வேறு வழியில்லை. எல்லா தளங்களுக்கும் இது போன்று நிகழ்வதில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கூகுள் ‘எங்களின் நிரல்களின் செயல்பாட்டில் சில குறிப்பிட்ட துறைகள் சம்பந்தப்பட்ட தளங்களுக்கு இவ்வாறு நேர வாய்ப்பிருக்கலாம், இது குறித்து தலைமை நிருவாகிக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்’ என்று பட்டும் படமாலும், தொட்டும் தொடாமலும் பொறுப்பாகப் பதில் சொல்கின்றது.